பாலசோர்:-
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் மஞ்சள் நிற ஆமை ஒன்று மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 196 கிலோமீட்டர் தொலைவில் சுஜன்பூர் கிராம மக்கள் தங்கள் பகுதியில் தனித்துவமான அரிய வகை மஞ்சள் ஆமை ஒன்றை கண்டுபிடித்தனர். இதற்கு முன்பு இந்த நிறத்தில் ஆமையை பார்த்திராத மக்கள் ஆச்சரியமடைந்தனர். அதனால் இதுதொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கிராமத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் ஆமையை மீட்டனர்.
வனத்துறையினரும் மஞ்சள் நிற ஆமையை இதுவரை பார்த்தது இல்லை என வியப்படைந்துள்ளனர். இது தனித்துவமான கண்டுபிடிப்பு என்றும், இதுவரை மஞ்சள் நிற ஆமையை பார்த்தது கிடையாது என்றும் வனவிலங்கு வார்டன் பானூமித்ரா ஆச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றன.
வழக்கம் போல IFS அதிகாரி சுஷாந்த நந்தா இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது ட்வீட்டர் பதிவில்:-
ஒடிசா பலசூரில் ஒரு அரிய மஞ்சள் ஆமை கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிந்துவில் உள்ளூர்வாசிகளால் கண்டெடுக்கப்பட்டது’ என்றார். மேலும் அந்த ஆமையின் கண்கள் பிங்க் நிறத்தில் காணப்படுவது அல்பினிசத்தின் அம்சமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனிதர்களில் அல்பினிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தோல் வெண்மை நிறமாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிசாவின் மயூர்பஞ்ச் (Mayurbhanj) மாவட்டத்திலுள்ள டியோலி (Deuli Dam) அணைப்பகுதியில் மீனவர் ஒருவர் இந்த வகை மென் ஓடு ஆமை (Trionychidae) ஒன்றை கடந்த மாதம் கண்டறிந்தார். இந்த வகை மென் ஓடு ஆமைகள் ஆசியா வட அமெரிக்கா ஆபிரிக்க நாடுகளில் காணப்படும் இந்த ஆமைகள் அதிகபட்சமாக 30 கிலோ எடை வரை வளரும் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழும் என்பது குறிப்பிடத்தக்கது.