மும்பை:-
மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
மாஸ்டர் கார்டு நிறுவனம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டுவருகிறது. இந்நிறுவன பயனாளர்களின் டெபிட், கிரெடிட் கார்டு எண்கள், பரிவர்த்தனை விவரங்கள் வெளிநாடுகளில் சேமித்துவைக்கப்பட்டுள்ளதக கூறப்படுகிறது.
மாஸ்டர் கார்டு போன்ற நிதிச் சேவை வழங்கும் நிறுவனர்கள் அதனுடைய பயனார்கள் குறித்த விவரங்களை இந்தியாவில்தான் சேமித்து வைக்க வேண்டும் என கடந்த 2018 அம் ஆண்டே ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.
ஆனால் மாஸ்டர் கார்டு நிறுவனம் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலை பின்பற்றவில்லை, இந்நிலையில், வாடிக்கையாளர்களின் தரவை சேமிப்பதில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாஸ்டர் கார்டு நிறுவனத்திற்கு அதிகமான அவகாசம் மற்றும் போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டபோதிலும், பணம் செலுத்தும் முறை தொடர்பான தரவுகளை சேமிக்கும் சர்வரை இந்தியாவில் வைக்காததால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதன்மூலம் புதிய வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளால் மாஸ்டர் கார்டுகளை வழங்க முடியாது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு ஜூலை 22 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
அதேசமயம், ஏற்கனவே மாஸ்டர் கார்டு பயன்படுத்துவோருக்கு புதிய தடையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் டைனர்ஸ் கிளப்புக்கு எதிராக ரிசர்வ் வங்கி இதேபோன்ற நடவடிக்கையை எடுத்தது. மே 1ம் தேதி முதல் புதிய உள்நாட்டு கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதற்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.