வாரங்கல்:-
தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில், கிணற்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட மொத்தம் 9 சடலங்கள் மீட்கப்பட்ட விவகாரத்தில் மர்மம் நீடிக்கும் நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே உண்மை தெரியவரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானாவில் வாரங்கல் மாவட்டம் கீசுகுண்டா மண்டலம் (Geesugonda Mandal) அருகே கோரிகுண்டாவில் (Gorrekunta) மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மசூத் ஆலம் என்பவர் தனது குடும்பத்துடன் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள கோணிப்பை தயாரிக்கும் (Gunny/Jute Bag Manufacturing Unit) தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் மசூத் ஆலம், அவருடைய மனைவி நிஷா, மகள் புஷாரா கதூன், மூன்று வயது பேரக்குழந்தை ஷகீல் ஆகிய 4 பேர் சடலமாக கிணற்றில் மிதந்துள்ளனர்.
மறுநாள் அதே கிணற்றில் மசூத்தின் மகன்கள் சபாக், சோகைல் பீகாரைச் சேர்ந்த ஷியாம், ஸ்ரீராம், திரிபுராவைச் சேர்ந்த ஷகீல் அஹமத் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். 9 பேரின் உடலில் எவ்வித காயங்களும் இல்லாத நிலையில் தற்கொலையா, கொலையா, எத்தகைய சூழலில் உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பதில் மர்மம் நீடிக்கிறது.
சம்பவ இடத்திற்கு வாரங்கல் போலீஸ் ஆணையர் V.ரவீந்தர் மாவட்ட ஆட்சியர் ஹரிதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர் மற்றும் நகர மேயர் பிரகாஷ் ராவ்-ம் சம்பவ இடத்திற்கு சென்றனர்.