டெல்லி:
தமிழ்நாடு காவல்துறை பெண் உயர் அதிகாரி கொடுத்த பாலியல் குற்றச்சாட்டால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தமிழக காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் வழக்கு விழுப்புரம் நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் மேல் முறையீட்டு மனு இன்று உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கில் உரிய நடைமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை, தன் மீது குற்றச்சாட்டு பதிய வேண்டும் என்ற நோக்கிலேயே அனைவரும் செயல்படுவதாகவும், சில அரசு அதிகாரிகளே தனக்கு எதிராக இருப்பதாகவும், எனக்கு எதிரான வழக்கு விசாரணையை நான் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.
ஆனால் இந்த வழக்கு தமிழகத்தில் நடைபெற்றால் நேர்மையாக இருக்காது. எனவே வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும், முன்னரே பேசி வைத்தது போல் எனக்கு எதிராக அனைவரும் செயல்படுகின்றனர் என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்தார். சிறப்பு டிஜிபியின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்பது சாதாரணமானவை அல்ல. அது மிகவும் தீவிரமானது. விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது என்றுவாதித்திட்டார்.
இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்ற மனுதாரருடைய கோரிக்கையை ஏற்க மறுத்ததுடன் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து கண்காணிப்பை செய்யக்கூடிய அந்த முடிவை ரத்து செய்வதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தமிழகத்தில் தான் நடைபெறும் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.