மும்பை:-
இந்தியாவின் சூப்பர் மேன் என்று மக்களால் தற்பொழுது கொண்டாடப்படும் சோனு சூட் கிர்கிஸ்தானில் (Kyrgysztan) சிக்கித்தவிக்கும் மாணவர்களை அழைத்து வர அடுத்த மிஷனை தொடங்கியுள்ளார்.
நடிகர் சோனு சூட் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட உத்தரப்பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களின் தனது சொந்த செலவில் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தார்.
அதோடு வேலையிழந்து சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உணவு உட்பட பல்வேறு பொருளாதார உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கித் தவிக்கும் 4000 மாணவர்களை இந்தியா அழைத்து வருவதற்கான அடுத்த முயற்சியை தொடங்கியுள்ளார். இதற்காக புதிதாக ஈமெயில் ஐடி ஒன்றை தொடங்கினார். அந்த ஐடியில் மாணவர்கள் தொடர்புகொண்டு தங்கள் விபரங்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், உங்களை இந்தியா அழைத்து வருவதற்கு எங்கள் குழுவைச் சேர்ந்த எவரும் பணம் கேட்க மாட்டார்கள் முழுக்க முழுக்க இலவசமாகவே மேற்கொள்ளப்படும் உதவி என்றும் கூறியுள்ளார்.
கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் ட்விட்டர் வழியாக தொடர்பு கொண்டு உதவி கோரி வருகிறார்கள். அவர்களுக்கு பதிலளித்துள்ள சோனு சூட் கவலைப்பட வேண்டாம் நிச்சயமாக உங்கள் அனைவரையும் இந்தியாவிற்கு அழைத்து வருவேன் என்று உறுதியளித்துள்ளார்.