புது டெல்லி
புது டெல்லியில் காற்று மாசு காரணத்தால் தற்பொழுது நாங்கள் வீட்டிற்கு உள்ளேயும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டிய சூழல்தான் நிலவுகிறது.
எனவே புது டெல்லி-அனைத்து பகுதிகளிலும் கடுமையான காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கையாக இரண்டு நாள் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் அல்லது அனைத்து வாகன இயக்கத்தையும் இரண்டு நாட்களுக்கு தடை செய்வது குறித்து பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் மாநில மற்றும் ஒன்றிய அரசுகளை கேட்டுக் கொண்டது.
காற்று மாசு பிரச்னை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி ரமணா, ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சரமாரி கேள்வி எழுப்பினார். அவர் கூறியதாவது: காற்று மாசு காரணத்தால் தற்பொழுது நாங்கள் வீட்டிற்கு உள்ளேயும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டிய சூழல்தான் நிலவுகிறது.
புது டெல்லியில் நிலைமை மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது. காற்று மாசுபாட்டிற்கு விவசாயிகளை மட்டுமே குறை கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.
முதலில் டெல்லி மக்களை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன? பயிர் கழிவுகள் எரிப்பதை குறைப்பதற்கு அரசுகளிடம் ஏதேனும் திட்டங்கள் இருக்கிறதா? டெல்லியில் உடனடியாக காற்று மாசுவை குறைப்பதற்கு செய்ய வேண்டிய திட்டம் என்ன? வேண்டுமென்றால் 2 தினங்களுக்கு அவசரகால செயல்பாடாக முழு ஊரடங்கை அமல்படுத்தலாமா?
காற்று மாசுவை குறைக்க விரிவான பிரமாண பத்திரமாக அடுத்த 2 நாளில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள்.இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டத்தை தனது அரசாங்கம் செய்து வருவதாகவும், திட்டத்தை விரைவில் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்றும் கூறினார்.
அனைத்து அரசு அதிகாரிகளும் ஒரு வாரம் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்று கெஜ்ரிவால் உத்தரவிட்டார், மேலும் தனியார் அலுவலகங்களும் இதைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.
வரும் திங்கள்கிழமை முதல் ஒரு வாரத்திற்கு நகரத்தில் உள்ள பள்ளிகளை மூடவும், ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நான்கு நாட்களுக்கு அனைத்து கட்டுமான நடவடிக்கைகளுக்கும் தடை விதித்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தத்த்தக்கது.