சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் 14 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க ஆலோசனை அளிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழுவினர், சென்னையில் எங்கெங்கு மழைநீர் தேங்குகிறது, அதை அகற்றும் வழி என்ன என்பது பற்றி அறிக்கை அளிக்க உள்ளனர்.
தமிழகத்தின் சேலம் சுப்ரமணிய நகர் பகுதியைச் சேர்ந்த திருப்புகழ் ஐஏஎஸ் பேரிடர் மேலாண்மையில் பட்டம் பெற்றவர். குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டபோது அங்கு அவர் சிறப்பாக பணியாற்றினார், இவரது விரைவு நடவடிக்கைகளால் இடிபாடுகளில் சிக்கிய ஏராளமான மக்களை மீட்டார். அதன் மூலம் குஜராத் மக்களின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளார் திருப்புகழ்.
அதுமட்டுமல்லாது நேபாள நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தின் போதும் அந்நாட்டு அரசுக்கு சிறப்பு ஆலோசகராக திருப்புகழ் பணியாற்றியுள்ளார். இவரது சகோதரரான இறையன்பு ஐஏஎஸ்தான் தற்போது தமிழகத்தின் தலைமைச் செயலாளராக உள்ளார்.
மேலும், பிரதமர் மோடியின் தனி ஆசோசகராக இருந்தவர். மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்த போது அவரது நம்பிக்கை நாயகனாக விளங்கியவர் திருப்புகழ் ஐஏஎஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.