12 முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு ஊசியில்லா கொரோனா தடுப்பு மருந்து அக்டோபர் முதல் வாரம் கிடைக்கும் என்று மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜைடஸ் கெடில்லா தெரிவித்துள்ளது.
குஜராத்தின் ஜைடஸ் கெடிலா நிறுவனம் தயாரித்துள்ள ஜைகோவ்-டி தடுப்பூசியை அவசரகாலத்துக்கு பயன்படு்த்திக்கொள்ள கடந்த மாதம் (ஆகஸ்டு) 20-ந் தேதி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது.
மொத்தம் 3 டோஸ்களை கொண்ட இந்த தடுப்பூசி, 28 மற்றும் 56 நாட்கள் இடைவெளியில் செலுத்த வேண்டும். 12 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்காக இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தடுப்பூசி மருந்து அடுத்த மாதம் (அக்டோபா்) கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஜைடஸ் கெடில்லா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஷர்வில் படேல் கூறுகையில்,
‘இம்மாதத்தில் (செப்டம்பர்) இந்த தடுப்பூசி வினியோகத்தை தொடங்கிவிடுவோம், அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து எங்கள் தடுப்பூசி கிடைக்கத் தொடங்கும்.
மாதம் ஒன்றுக்கு ஒரு கோடி தடுப்பூசி வீதம் வினியோகம் செய்ய திட்டமிட்டு உள்ளோம். படிப்படியாக எங்கள் தயாரிப்பை உயர்த்தி மாதத்துக்கு 4 கோடி முதல் 5 கோடி அளவுக்கு உற்பத்தியை அதிகரிப்போம்’ என தெரிவித்தார். ஊசியில்லா தொழில்நுட்பத்தில் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது.
அதாவது, ஊசி மூலம் தடுப்பு மருந்து செலுத்தப்படாமல், தோல் பகுதியில் ஹைப்போடெர்மிக் ஊசி் மூலம் அதிர்வலைகள், வாயுக்களின் அழுத்தம், மின்முனை மூலம் இந்த நோய் தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.
ஜைகோவ்-டி தடுப்பூசி உலகிலேயே முதன்முதலாக பிளாஸ்மா டிஎன்ஏ தடுப்பூசியாகும். மேலும் கொரோனா வைரஸுக்குத் தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் பிளாஸ்மிட் டிஎன்ஏ தடுப்பூசி என்பது ஜைடஸ் கெடிலா நிறுவனத்துடையது மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.