இந்தியாவிலேயே முதன் முறையாக புற்றுநோயை குணப்படுத்தும் அதிநவீன கதிர்வீச்சு சிகிச்சை மையத்தை, ஓமந்தூரார் மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில், 6 கோடி ரூபாய் மதிப்பிலான புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை வளாகம், 22 கோடி ரூபாய் மதிப்பிலான புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கும் லீனியர் ஆக்சிலேட்டர் கருவி மற்றும் சி.டி. சிமுலேட்டர் கருவி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வளாகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புற்றுநோய்க்கு கதிர்வீச்சு மூலம் சிகிச்சை அளிக்கும் கருவிகளின் செயல்பாடுகளையும் தொடங்கிவைத்தார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு கதிர்வீச்சு மூலம் சிகிச்சை அளிக்கும் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
உடலில் எந்த இடத்தில் புற்றுநோய் இருந்தாலும், கதிர்வீச்சு மூலமே குணப்படுத்த முடியும் என்றார்.
பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த மருத்துவச் சிகிச்சை, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்கு இலவசமாகவே கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
இந்த நவீன கருவிகள், நெல்லை, தூத்துக்குடி, மதுரை, கோவை, தஞ்சை, சேலம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களிலும் விரைவில் பொருத்தப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.