புதுச்சேரியிலுள்ள பூரணாங்குப்பம் கிராமத்தில் அரசு கிளை நூலகம் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் அரசு கொறடா ஆகியோர் ஆளுநர் கிரண்பேடியை சரமாரியாக குற்றம் சாட்டினர்.
அரசு கொறடா அனந்தராமன், கிரண்பேடி டெல்லியில் 2 முறை தேர்தலில் தோல்வியுற்று கொல்லைப்புறமாக பதவிக்கு வந்து தொல்லை கொடுத்து வருகிறார் என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் நமச்சிவாயம், மக்களின் தேவைகளை, உணர்வுகளை அறியாதவர் கிரண்பேடி என சாடினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய, முதலமைச்சர் நாராயணசாமியும் கிரண்பேடியை கடுமையாக விமர்சித்தார். ‘மத்திய அரசு உதவி செய்யவில்லை. கிரண்பேடியால் தினமும் தொல்லை. இதனால் நீதிமன்றத்தை நாடி இருப்பதாகவும் நாட்டில் எந்த ஒரு மாநிலத்திலும் ஆளுநர் நிர்வாகத்தில் தலையீடு செய்யவில்லை. ஆனால் மத்திய அரசின் தூண்டுதல் காரணமாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி அரசுக்கு தினமும் தொல்லை கொடுத்து வருகிறார்’ என்று விமர்சனம் செய்தார்.