குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் போராட்டம், பேரணிகளை நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக, குடியுரிமை திருத்த சட்ட விதிகளை நியாயப்படுத்தும் வகையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமம் அருகே பா.ஜ சார்பில் நேற்று பேரணி நடந்தது. இதில், மாநில முதல்வர் விஜய் ரூபானி, பாகிஸ்தானை இந்தியாவில் இருந்து பிரித்தபோது, அந்த நாட்டில் 22 சதவீதம் இந்துக்கள் இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 3 சதவீதமாக குறைந்து விட்டது. அவர்கள் இந்தியாவுக்கு திரும்ப விரும்புகின்றனர்.
இதுபோல், வங்கதேசத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 2 சதவீதமாக சுருங்கி விட்டது. முஸ்லிம்கள், 150 முஸ்லிம் நாடுகளில் எங்கு வேண்டுமானாலும் சென்று வசிக்கலாம். ஆனால், இந்துக்களுக்கு இந்தியா மட்டுமே இருக்கிறது. எனவே, அவர்கள் இங்கு திரும்பி வருவதில் என்ன பிரச்னை?. குஜராத்தில் கட்ச் மாவட்டத்தில் 10,000 அகதிகள் வசிக்கின்றனர். அவர்களில் பலர் தலித்துகள். எதிர்க்கட்சிகள், அரசியல் செய்வதற்காகவே இவ்வாறு எதிர்க்கின்றன என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.