சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
2007ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால், சென்னைக்கு அருகில் உள்ள பெரும்பாக்கத்தில் 16.86 ஏக்கர் நிலம் தமிழ்நாடு அரசின் சார்பில் செம்மொழி நிறுவனத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்நிலத்தில் ரூ.24.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனக் கட்டடம் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் கடந்த 12ம் தேதி அன்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மொத்தம் நான்கு தளங்களைக் கொண்டுள்ளது. தரைத் தளத்தில் 45,000-க்கும் மேற்பட்ட தொன்மையான நூல்களைக் கொண்ட அந்த நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். நூலகத்திலுள்ள பழமையான நூல்கள் குறித்தும், செவ்வியல் நூல்களின் மின்படியாக்கம் குறித்தும் ஆவலோடு கேட்டறிந்தார்.
அதன் பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை பணிகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அறியச் செய்ய பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர்கல்வித் துறையுடன் ஆலோசனை மேற்கொண்டு செயல்பட வேண்டும் என்றும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் விர்சுவல் அகாடமி போன்ற மாநில அரசின் தமிழ் பிரிவுகளுடன் இயன்றவரை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும் செம்மொழி நிறுவனத்தின் தொல்காப்பிய ஆய்வு தெய்வச் சிலையார் உரைநெறி, ஐங்குறுநூறு குறிஞ்சி. ஐங்குறுநூறு பாலை, வாய்மொழி வாய்ப்பாட்டுக் கோட்பாட்டு நோக்கில் சங்க இலக்கியம், புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு,Dravidian Comparative Grammar-II, A Historical Grammar of Tamil ஆகிய எட்டு புதிய நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட, தொழில், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் பெற்றுக் கொண்டார்.