நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை புறக்கணித்து பாஜக சார்பில் பங்கேற்ற வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார்.
இன்று காலை 10.30 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட 13 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தில் உடன்பாடு இல்லை என பாஜக வெளிநடப்பு செய்துள்ளது. நீட் தேர்வு மாநில சுயாட்சிக்கு எதிரானது என்றும், ஒன்றிய அரசினால் மாநில அரசுகள் மீது திணிக்கப்படும் நீட் தேர்வு என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது ஏற்புடையது அல்ல என வானதி சீனிவாசன் தெரிவித்தார். சமூக நீதிக்கு நீட் தேர்வு எதிரானது எனக்குறிப்பிட்டுள்ளதை ஏற்க முடியாது எனத் தெரிவித்த அவர், நீட் தேர்வால் இடஒதுக்கீட்டிற்கும், சமூக நீதிக்கும் எள் முனை அளவும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.