சிவகாசியில் உள்ள ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் மற்றும் ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது ராஜேந்திர பாலாஜி மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் வலுவாக இருப்பதாகவும், அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்பதால் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் காவல்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
போலீசார் தரப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி நிர்மல் குமார், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து ராஜேந்திர பாலாஜி விரைவில் கைதாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதற்கான 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையில் களம் இறங்கினர்.
தற்போது வரை ராஜேந்திர பாலாஜி எங்கே இருக்கிறார் என்பது குறித்து தெரியாததால் அவரது உறவினர்கள், நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கையில் உள்ள ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்களான வசந்தகுமார், ரமணன் ஆகிய இருவரிடமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் திருத்தங்கல் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல் ராஜேந்திர பாலாஜியின் ஓட்டுநரிடமும் காவலர்கள் விசாரணை நடத்தினர். விசாரணை நிறைவடைந்ததை அடுத்து மூவரையும் விருதுநகர் குற்றப்பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்.