கிண்டி தனியார் விடுதியில் 3ஆவது நாளாக நடைபெற்று வரும் ஆறாவது உலகத்தமிழர் பொருளாதார மாநாட்டில் பங்கேற்று, தமிழ் இனிமையான மொழி ,எனவே நான் தமிழை விரும்புகிறேன் என தமிழில் பேசினார் ஆளுநர்.
தமிழகத்தில் அந்த காலத்திலேயே விவசாயம் செழிக்க அணைகளும், தொழில் வர்த்தகம் வளர்ச்சியடைய சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளதை சங்க இலக்கியங்கள் நமக்கு சொல்கின்றன என பெருமிதம் தெரிவித்த அவர், தமிழகம் பன்முகதன்மை வாய்ந்த மனிதவளத்தை கொண்டுள்ளது என்றும்,ஆட்டோமொபைல், கெமிக்கல்,டெக்ஸ்டைல் போன்ற துறைகளில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்றார்.
தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது, துபாய், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 37,300 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளார். தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என பாராட்டு தெரிவித்த அவர், தமிழகத்திற்கு வருவதற்கு முன் என் சொந்த மாநிலமான மகாராஷ்டிரா தான் எல்லா துறைகளிலும் முதன்மையான மாநிலம் என்று எண்ணியிருந்தேன். ஆனால், தமிழகம் வந்த பிறகுதான் என் சொந்த மாநிலத்தை விட தமிழகமே பல துறைகளில் முதன்மையான மாநிலமாக விளங்குகிறது என்பதை புரிந்து கொண்டேன் என்று பெருமிதம் தெரிவித்தார்.