முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
அண்ணாவின் மறைவிற்கு பிறகு கருணாநிதி தமிழக முதலமைச்சராக பதவியேற்ற போது, 1969ம் ஆண்டு அவருக்கு உதவியாளராக நியமிக்கப்பட்டவர் சண்முகநாதன். கருணாநிதியின் நிழல் என உடன்பிறப்புகளால் குறிப்பிடப்படும் அளவிற்கு கருணாநிதி உயிரிழக்கும் வரை 48 ஆண்டு காலம் அவரது உதவியாளராகவே இருந்து வந்தார்.
திமுகவினரின் பேச்சுக்களை பேராசிரியர், என் போன்றோரின் பேச்சுகளை உடனுக்குடன் பதிவு செய்து எழுதி மேலிடத்துக்கு அனுப்பும் பணியை காவல் துறையின் துப்பறியும் பிரிவினர் மேற்கொள்வர். அப்படி தமிழக காவல்துறையில் சுருக்கெழுத்து நிருபராக தனது வாழ்க்கையை தொடங்கியவர், அதன் பின்னர் கருணாநிதியின் உதவியாளராக மட்டுமே பணியாற்றி வந்தார். கலைஞரின் மறைவிற்கு பிறகு கூட கோபாலாபுரம் இல்லத்திற்கு தினமும் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இதனிடையே, வயது மூப்பு காரணமாக சண்முகநாதன் அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சண்முகநாதன் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.