ஈரோடு மாவட்டத்தில் ரூ.261 கோடி மதிப்பில் முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு வந்த நிலையில் கோபி அருகே கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து ஈரோடு நோக்கி வந்த போது பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து இன்று காலை 10.30 மணிக்கு பெருந்துறை அருகே நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரூ.261.57 கோடி மதிப்பில் முடிவுற்ற 135 திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் ரூ.183.70 கோடி மதிப்பீட்டில் 1,761 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய போது இந்தியாவிலேயே சிறந்த கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில்தான் உள்ளன என்றும் பெண் தொழில் முனைவோர் தமிழகத்தில் தான் அதிகம் என்றும் பல்வேறு மாநிலங்கள் தமிழக திட்டங்களை பின்பற்றி வருகின்றன எனவும் இந்தியாவுக்கே வழிகாட்டியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது என்றும் கூறினார்.
மேலும் அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட பல்வேறு திட்டங்களை மீண்டும் செயல்படுத்துகிறோம். யாரோ ஒருசில தொழிலதிபர்கள் மட்டும் வளர்வது அல்ல வளர்ச்சி, அனைவரும் வளர்வதுதான் வளர்ச்சி என்றும் நாட்டிலேயே தனிநபர் வருமானம் தமிழ்நாட்டில் தான் அதிகம். முதல்-அமைச்சராக மட்டுமல்ல உங்களில் ஒருவனாக இருந்து செயல்பட்டு வருகிறேன். மக்களை காக்கக்கூடிய அரசாக மட்டுமில்லாமல் மண்ணையும் காக்கக் கூடிய அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது என்று கூறினார்.