சென்னை:-
தமிழக அரசு கடந்த 2016-ம் ஆண்டு முதல் www.tan-g-e-d-co.gov.in என்ற ஆன்லைன் முகவரி மூலம் மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தியது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வந்தது.
இந்தநிலையில் வரும் மார்ச் 1 முதல் வீடுகளுக்கு மின் இணைப்பு தேவைப்பட்டால் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும் என்றும்; அவ்வாறு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரிய உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணியை விரைவுபடுத்துவதற்காக வரும் மார்ச் 1-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தின் விதிமுறைகளின்படி தங்களது தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அத்துடன் உரிய ஆவணங்களுடன், அதற்கான கட்டணத்தை செலுத்தினால் அடுத்த 10 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும்.
அலுவலகங்களுக்கு நேரடியாக வந்து விண்ணப்பிப்பதை விட பொதுமக்கள் ஆன்லைனில் எளிமையாக விண்ணப்பிக்க முடியும். இதனால் தேவையற்ற அலைச்சல் குறையும்.
தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்பும் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்பது கடந்த ஆண்டு முதல் அமலில் உள்ளது. இந்த நடைமுறையில் தொடர்ந்து வருகிறது.
மின்சார கட்டணத்தை கிரெடிட் கார்டு , டெபிட் கார்டுகள் மூலம் செலுத்தும் முறையும் உள்ளது. இதற்காக அனைத்து மின்கட்டணம் செலுத்தும் மையங்களிலும் கருவிகளும் வழங்கப்பட்டு உள்ளன.
ஆனால் பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் ரொக்கமாகவே மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.
எனவே இதுகுறித்து பொதுமக்களுக்கு உரிய வகையில் விழிப்புணர்வு அளிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது என கூறினார்கள்.