கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ஒரு வருடம் தள்ளிவைக்க ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே (Shinzo Abe) மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளது. முதலில் இதற்கு இசைவு தெரிவிக்க மறுத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பல்வேறு நாடுகள் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த தொடர்ந்து இதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.
இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேக் (Thomas Bach) கூறுகையில்:-
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக்போட்டி இந்த ஆண்டு ரத்து செய்வதாக தெரிவிக்கப்படுகிறது உயிர்களை காக்கும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு போட்டிகளை நடத்துவதற்கான தேதியை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி குழு மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி அமைப்பாளர்கள் கலந்தாலோசித்து முடிவு செய்வார்கள்.
ஒலிம்பிக் போட்டிகள் 1896 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.இதுவரை மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகள் போரின் காரணமாக நடத்த முடியாமல் போயுள்ளது.
முதல் உலகப்போரின் காரணமாக 1916 ஆம் ஆண்டு பெர்லின் நகரில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.
இதற்கு அடுத்ததாக 1940-ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தத்தின் போது இதே டோக்கியோ நகரில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.
அதேபோல் அதற்கு அடுத்ததாக 1944 ஆம் ஆண்டு லண்டன் நகரில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.
ஆனால், வரலாற்றில் முதன்முறையாக வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.