நெல்லை மாநகராட்சியில் 36 அலுவலகங்களில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 253 கிலோவாட் மின் உற்பத்தி 10 நாட்களில் துவங்கும் என மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தெரிவித்தார். 4 மண்டலத்திற்கு உட்பட்ட 36 அலுவலக கட்டிடங்களில் மின்சார சிக்கன வசதியை கருத்தில் கொண்டு, ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் சூரிய ஒளி தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், நெல்லை டவுன் மாநகராட்சி கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.63 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடிந்து முடியும் நிலையில் மொத்தம் 46 கழிப்பறைகள், பள்ளியைச் சுற்றியுள்ள சுற்றுச்சுவரை உயர்த்தும் பணிகள் பார்வையிட்டு பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பள்ளி கட்டிடத்தில் செயல்பட்டு வரும் சூரிய ஒளி மேற்கூரையை ஆணையாளர் கண்ணன் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
கண்டியப்பேரியில் செயல்படும் நுண் உரம் செயலாக்க மையத்தில் குடியிருப்பு உரிமையாளர்களிடமிருந்து சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரித்து, தயாரிக்கப்படும் நுண் உரத்தினை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் பணியையும், இம்மையத்தில் பணியாற்றும் பணியாளர்களின் செயல்பாடு குறித்தும் ஆணையாளர் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர்கள் பாஸ்கரன், சாந்தி மற்றும் சுகாதார அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.