சென்னை:-
கோயம்பேட்டில் வேலைபார்த்த வியாபாரிகள், தொழிலாளர்கள், அங்கு பணியாற்றிய காவல்துறையினர் என சுமார் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கோயம்பேட்டில் கடும் கட்டப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதால் அங்கு பணியாற்றிய பல தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊரக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
அப்படி, கோயம்பேடு மார்கெட்டில் இருந்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்குத் திரும்பிய 20 தொழிலாளர்களுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 20 பேரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கோயம்பேட்டில் இருந்து கடலூருக்கு வந்த 700 பேர் வந்தனர். அவர்களில் 27 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவர்கள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
மாவட்ட சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ அபிநவ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
கோயம்பேட்டில் இருந்து வந்த மற்றவர்களை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். இதில் மீதமுள்ளவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. ஒருவேளை சோதனை முடிவுகள் வெளியானால், கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கொரோனா தாக்கம் காரணமாக திருவாரூர், கடலூர், அரியலூரில் நாளை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மருத்துவமனை, மருந்தகங்கள், அம்மா உணவகங்கள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.