வேலைவாய்ப்பில் சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு தற்போது நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்தின்கீழ் ரோலர் ஸ்கேட்டிங், ஸ்குவாஷ், கபடி மற்றும் உஷீ ஆகிய விளையாட்டுகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதோடு, தமிழ்நாட்டின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுக்கு முந்தைய இந்திய தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டானது 3% விளையாட்டு இட ஒதுக்கீட்டின்கீழ் சேர்க்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள சிலம்ப விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெருமளவில் பயன்பெறுவர் என்றும், தமிழினத்தின் பழங்கால தற்காப்புக் கலைகளில் சிறப்புமிக்க சிலம்பம் விளையாட்டிற்கு மாபெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
ஏற்கெனவே மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தில் சிலம்பம் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.