திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்றும், நாளையும் 20 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10ம் தேதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோவிலில் உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெறும்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே, கார்த்திகை தீபத் திருவிழாவில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றபோது. தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், திருவண்ணாமலையில் இன்றும், நாளையும் 5,000 உள்ளூர் பக்தர்கள், 15 ஆயிரம் வெளியூர் பக்தர்கள் என 20,000 பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.