மதுரை :
மதுரை நகரில் ‘போக்குவரத்து விதிமீறல் அபராதம்’ என்ற பெயரில் போலீசார் சம்பந்தம் இல்லாத நபருக்கு SMS அனுப்புகின்றனர். வாகனங்கள் நிறுத்துமிடங்களில் நிறுத்தினால் கூட ‘நோ பார்க்கிங்’ என்று SMS அனுப்பி குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
நகரில் ஒன்வே, ஹெல்மெட் அணியாதது, அதிவேகம், அதிக சரக்குகளை கொண்டு செல்லுதல், அலைபேசியில் பேசியவாறு வாகனம் ஓட்டுவது போன்ற விதிமீறல்களை ஆங்காங்கு போலீசார்அலைபேசியில் படம் பிடித்து ஆன்லைனில் அபராதம் செலுத்த SMS, அனுப்புகின்றனர். இதை போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு பிரிவு போலீசார் தனித்தனியே போட்டி போட்டு வசூலிக்கின்றனர்.
அபராத தொகையுடன் SMS, அனுப்பும்போது அதை செலுத்த ‘லிங்க்’ அனுப்புகின்றனர்.எந்த விதிமீறலுக்காக அபராதம் என குறிப்பிடுவதில்லை. ‘லிங்க்’ வழியாக சென்று பார்த்தால் நம் வாகனவிபரங்கள் மட்டுமே இருக்கிறது. எந்த விதிமீறலுக்காக அபராதம் போடப்பட்டது என்பது அதை விதித்த போலீசாருக்கு மட்டும் தெரியுமாம்.
அபராத தொகை குறைவாக இருப்பதால் ‘நாம் எங்கேயாவது விதி மீறி இருப்போம்’ என வாகன ஓட்டிகள் சமரசமாகி அபராதம் செலுத்தி விடுகின்றனர். நேர்மையாக நடப்பவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை கௌரவ குறைச்சலாக கருதி உடனே செலுத்தி விடுகிறார்கள்.சில நாட்களுக்கு முன் கள்ளிக்குடியை தாண்டாத பெண்ணிற்கு கோவையில் விதிமீறியதாக அபராதத் தொகையுடன் SMS., வந்தது.
குழப்பமடைந்த அவர் போலீசில் புகார் செய்ய, கோவை போலீசார் அசடு வழிந்தனர். நேற்றுமுன்தினம் மேலமாசி வீதியில் வழக்கமாக வாகனம் நிறுத்தும் இடத்தில் நின்ற பல கார்களுக்கு ‘நோ பார்க்கிங்’ என்று அபராதம் விதிக்கப்பட்டது. அருகில் நிறுத்தப்பட்டிருந்த அப்பகுதி கடை உரிமையாளர்களின் வாகனங்களுக்கு அபராதம்விதிக்கப்படாதது ஆச்சரியம்.
ஒவ்வொரு மாதமும் இவ்வளவு விதிமீறல் வழக்கு, அபராதம் என்று கணக்கு காட்டுவதற்காக போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிப்பவர்களுக்கும் குறைந்த தொகையில் அபராதம் விதிப்பது நியாயம்தானா????. இதுவும் ஒரு ‘பகல் கொள்ளை’தானே. கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா நடவடிக்கை எடுப்பாரா????என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்…