சென்னை:
வடசென்னையை கலக்கிய பிரபல பெண் தாதாவுக்கு பாஜகவில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பதவியேற்றதில் இருந்து சினிமா பிரபலங்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
அதேபோல, போலீசாரால் தேடப்பட்டு வரும் ரவுடிகள், கட்ட பஞ்சாயத்து செய்பவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக பாஜகவில் இணைவது ஃபேஷனாக இருந்து வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி கல்வெட்டு ரவி பாஜகவில் இணைந்தார். அவர் இணைந்தது கட்சியில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மயிலாப்பூரை சேர்ந்த டெக்கன் ராஜா,ECR பகுதியைச் சேர்ந்த சங்கர் உள்ளிட்ட பல ரவுடிகள் பாஜகவில் இணைந்தனர்.மேலும் படப்பையில் பிரபல ரவுடி படப்பை குணாவும் பாஜகவில் இணைவதாக இருந்தது. அதற்குள் அவரை போலீசார் கைது செய்து விட்டனர்.
இந்நிலையில் தற்போது புளியந்தோப்பு மற்றும் பேசின்பிரிட்ஜ் பகுதியை கலக்கிய பிரபல பெண் தாதா புளியந்தோப்பு அஞ்சலை என்பவர் பாஜவில் அண்மையில் இணைந்தார். அவர் இணைந்தவுடன் அவருக்கு தற்போது கட்சியில் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது வடசென்னை மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு பேசின்பிரிட்ஜ் பகுதியில் ராதா என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் அஞ்சலையும் ஒருவர். மேலும் ஒரு கொலை முயற்சி. இரண்டு கந்துவட்டி வழக்குகள் என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளி லிஸ்ட்டிலும் இடம் பிடித்துள்ளார். அவருக்கு பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சென்னை முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.