சென்னை:-
கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் (70) இன்று மாலை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் ஹெச். வசந்தகுமாருக்கு ஆகஸ்ட் 10-ம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த அவரது உடல்நிலை இன்று மோசமடைந்து, இன்று மாலை உயிரிழந்தார்.
மறைந்த வசந்தகுமார் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதால் சிறுவயது முதலே காங்கிரஸ் கட்சியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராகவும் இருந்தார். இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், தற்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாகவும் உள்ளார்.
இவரது அண்ணன், முதுபெரும் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் சித்தப்பா, வசந்தகுமார். இவரது மகன் விஜய்வசந்த் பிரபல நடிகர் ஆவார்.
வசந்தகுமார் உடலுக்கு தலைவர்கள், பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்த நாளை (ஆக. 29) காலை 8 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலி செலுத்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
சாதாரண வியாபாரியாக தமது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய வசந்த குமார், வணிகத்திலும், அரசியலிலும் தமது கடின உழைப்பால் வெற்றி குறியை பதித்தவராவார்.
இவர் எழுதியுள்ள ‘வெற்றிப்படிக்கட்டு’ எனும் புத்தகம், வாழ்வில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டி நூல் என்றுக் கூறலாம்.