ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே, இந்த ஒன்பது மாவட்டங்களிலும் வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி துவங்கியது.
நேற்றுவரையில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 41,027 வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 10,107 வேட்பு மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,683 வேட்புமனுக்களும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 228 வேட்புமனுக்களும் என 54,045 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை ( செப்டம்பர் 22) கடைசி நாள் என்பதால் வேட்புமனுதாக்கல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 23 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.