நேரடி தேர்வு வேண்டாம், ஆன்லைன் எக்ஸாம் தான் வேண்டும் என்று கோரி மூன்றாவது நாளாக போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்தாண்டு கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. எனினும், மாணவர்களின் படிப்பு பாதியில் நின்றுவிடக் கூடாது என்பதற்காக ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடைபெற்றன.
பின்னர் இரண்டாம் அலையின் போது தேர்வுகளை நேரடியாக நடத்த முடியாத சூழல் நிலவியதால் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் உட்பட அனைத்து வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியே நடத்தப்பட்டன. தற்போது கொரோனா பரவல் முற்றிலும் குறைந்துவிட்டன. கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்டன. தற்போது செமஸ்டர் தேர்வுகள் நெருங்கி வருகின்றன.
தற்போது கொரோனா முழுவதுமாக குறைந்துவிட்டதால் நேரடி தேர்வு நடத்த பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் தீர்மானித்துள்ளன. ஆனால் மாணவர்கள் மத்தியில் இந்த முடிவு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் வழியாக பாடங்களை நடத்திவிட்டு, தேர்வை நேரடியாக நடத்துவது சரியான அணுகுமுறை அல்ல எனக்கூறி மதுரை, திருச்சி மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் உயர்க்கல்வித் துறை ஆன்லைன் வழியாக தேர்வு நடத்த வாய்ப்பே இல்லை என்றும் நேரடியாகவே நடைபெறும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் இன்றும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். ஆனால் மதுரை மாவட்ட காவல் துறை மாணவர்கள் போராட்ட நடத்த அனுமதி இல்லை எனவும், மீறினால் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரித்தது.
ஆனால் எச்சரிக்கை மீறி மாணவர்கள் மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த காவல் துறையினர் 150 மாணவர்களைக் கைதுசெய்தது. ஏற்கெனவே 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.