பெங்களூர்
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் தலா ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேர் சார்பிலும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, வழக்கை விசாரித்து 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறினார்.
கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கா்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே ஜெயலலிதா மரணம் அடைந்தார்.
உச்ச நீதிமன்றம் சசிகலா உள்பட 3 பேருக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் வழங்கிய தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதத்தொகையை உறுதி செய்து தீர்ப்பு கூறியது.
இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந் தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
சசிகலா, இளவரசி ஆகியோர் தண்டனை காலம் முடிந்ததும் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகையை செலுத்தினர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலைசெய்யப்பட்டனர்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்தும், சுதாகரன் மட்டும் அபராதம் செலுத்தவில்லை. இதனால் நீதிமன்ற உத்தரவுப்படி அவர் அபராதத் தொகையை செலுத்த தவறியதால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையை அனுபவித்தார்.
சுதாகரன் தண்டனை காலம் இன்றுடன் முடிவடைந்தது. எனவே இன்று காலை சுதாகரன் விடுதலை செய்யப்பட்டார்.