தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக நடிகர் சூர்யா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில், “கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங்’ மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது.” என்று குறிப்பிடப்பட்டிருந்து. இதையடுத்து, நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் நடிகர் சூர்யா பேசியதாக, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்றும், நீதிமன்ற மாண்பை காக்க வேண்டும் என்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதினார்.
தற்போது, அந்த விவகாரத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதிகள் 6 பேர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
அதில் “சூர்யா தெரிவித்துள்ள கருத்துக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை. நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் சூர்யா கூறியதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்பை பெற்றுள்ள நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டுவிட வேண்டும். உயர் நீதிமன்றத்தின் மாண்பு மீது உள்ள அக்கறையாலும், தேவையற்ற சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்பதாலும் கோரிக்கை வைப்பது எங்கள் கடமையாகும்.”என்று எழுதப்பட்டிருந்தது.
ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, டி.சுதந்திரம், து.அரிபரந்தாமன், கே.கண்ணன், மற்றும் ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் அந்த கடிதத்தில் இடம்பெற்றிருந்தனர்.