ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கவேண்டுமென அவரது தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், தன்னைக் கவனித்துக்கொள்ள மகள் நளினிக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே நளினியின் தாயார் பத்மா அளித்த மனு அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும், அதுகுறித்து விளக்கமளிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். தமிழக அரசின் இந்த முடிவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நளினியின் தாயார் பத்மா தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்தனர்.