ஒமைக்ரான் வைரஸ் என அனைத்தையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது தான் தமிழக அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இரவு, பகல் பாராமல் உழைத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தி ஒடுக்கி உள்ளோம். இப்போது ஒமிக்ரான் அச்சம் வந்துள்ளது, அனைத்தையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது தான் தமிழ்நாடு அரசு என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
டிசம்பர் மாதத்தில் மீண்டும் பெருமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் சென்னையில் மழை நீர் தேங்குவதை தடுப்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான 18 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,
வரலாறு காணாத மழை பெய்த போதிலும் பாதிப்பு என்பது குறைவாகவே ஏற்பட்டுள்ளது. இன்னொரு முறை இத்தகைய மழை பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டியது அவசியம் .
மழைநீர் தேங்கும் இடங்களில் அப்பகுதி மக்களின் வழிகாட்டுதல்களோடு இணைந்து அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். சென்னையில் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான வடிகால்கள் இல்லாததே மழை நீர் தேங்கியதற்கு காரணம்.
முந்தைய பாதிப்புகளை எதிர்வரும் ஆண்டுகளில் தடுத்துவிட்டோம் என்கிற பெயரை நாம் எடுத்தாக வேண்டும். எனவே நடைமுறை சாத்தியமுள்ள திட்ட அறிக்கையை தாருங்கள் என்றார்.
மேலும், இரவு, பகல் பாராமல் உழைத்து தற்போது கொரோனவை கட்டுப்படுத்திய நிலையில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இயற்கையை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் திறமையாக கையாள முடியும்.
தற்போது ஒமிக்ரான் அச்சம் வந்துள்ளது, அனைத்தையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது தான் தமிழ்நாடு அரசு என்று ஸ்டாலின் கூறினார்.