புதுச்சேரி:-
தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் இரவு ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் துப்பாக்கி எடுத்துச் செல்லலாம் என எஸ்.எஸ்.பி. லோகேஷ்வரன் கூறியுள்ளார். மேலும், இரவு ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உட்பட்ட நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய பூமிநாதன் இரவு ரோந்து பணியின் ஆடு திருடர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து இரவு ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அவர்கள் துப்பாக்கியை எடுத்து செல்ல டிஜிபி சைலேந்திரபாபு அனுமதி அளித்தார்.
இந்நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் இரவு ரோந்து பணிக்கு செல்லும் போலீசார் துப்பாக்கி எடுத்துச் செல்லலாம் என எஸ்.எஸ்.பி. லோகேஷ்வரன் கூறியுள்ளார்.