சென்னை:-
சிவில் சர்வீஸ் தேர்வில் பிரபல நகைச்சுவை நடிகர் சின்னிஜெயந்த் மகன் வெற்றி பெற்றுள்ளார்.
நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையாளர்களுள் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் சின்னி ஜெயந்த். ரஜினிகாந்த், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் கல்லூரி கதை படங்களில் ஹீரோக்களின் தோழனாக பல படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் மூத்த மகன் பெயர் ஸ்ருதன் ஜெய் நாராயணன். இவர் நேற்று முன்தினம் வெளியான சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், இவர் இந்திய அளவில் 75வது இடம் பிடித்துள்ளார்.
சென்னையில் பள்ளி, கல்லூரியை முடித்த இவர் டெல்லியின் அசோகா பல்கலைக்கழகத்தில் ‘யங் இந்தியா ஃபெல்லோஷிப்’ எனப்படும் டிப்ளமோ படிப்பை முடித்தார். சமூகவியல், கலாச்சார அறிவியல் படிப்புகளுடன் யூபிஎஸ்சி பயிற்சிக்குத் தயாராக இது இவருக்கு உதவியாக இருந்துள்ளது. அங்கே சர்வதேசப் பேராசிரியர்கள், யூபிஎஸ்சி தேர்வர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் எனப் பல்வேறு தரப்பினரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதன் பின்னர் நாஸ்காம் அறக்கட்டளையில் வேலைக்குச் சேர்ந்துள்ளார், பின் ஐ.டி. தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றிலும் வேலை செய்துள்ளார் ஸ்ருதன். பின்னர் சென்னையில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் யுபிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி எடுத்துள்ளார்.
சினிமாவில் உள்ள பல நடிகர்களின் வாரிசுகள், சினிமா துறையை தேர்ந்தெடுக்க விரும்பும் சூழலில், ஸ்ருதன் அதிலிருந்து மாறுபட்டு சிவில் சர்வீஸ் பணியை தேர்ந்தெடுத்திருப்பதை எண்ணி ரசிகர்களும், திரைத்துறையினரும் சின்னி ஜெயந்த் மகனுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.