பள்ளி மாணவி ஒருவர் ஓடும் ரெயிலில் செய்த விபரீத சாகசம் அங்கிருந்த பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலானதால் இதுபற்றி கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டியை அடுத்த கவரை பேட்டையில் ரயில் நிலையத்தில் ஓடும் மின்சார ரயிலில் பள்ளி மாணவருடன் சேர்ந்து மாணவி ஒருவரும் மிகவும் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மின்சார ரயில் புறப்பட்டு மெதுவாக நகரவும், அந்த மாணவி ரயில் படிக்கட்டில் உள்ள கம்பியை பிடித்தபடி சிறிது தூரம் நடைமேடையில் ஓடி வந்து பின்னர் துள்ளிக் குதித்து ரயிலில் ஏறுகின்றாள். பின்னர் அதே வேகத்தில் ரயில் படிக்கட்டில் தொங்கியபடி தனது ஒரு காலை நடைமேடையில் உரசிய படி சக பள்ளி மாணவருடன் சேர்ந்து பயணம் செய்கிறார்.
இந்த காட்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவாகி உள்ளது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்கள் செய்யும் தவறுகளை எல்லாம் பெண்களும் சேர்ந்து செய்வது தான் மாற்றம், முன்னேற்றம், சமத்துவம் என்றும் தற்குறித்தனமானவர்கள் கூறும் அறிவுரைகள் இதுபோன்ற விபரீதங்களுக்கு காரணமாக அமைகிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.