ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராக விலக்கு அளிக்க கோரி நடிகர் ரஜினிகாந்த் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடியில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. இதில் 13 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் நாடு சுடுகாடு ஆகிவிடும் எனவும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு சமூக விரோதிகளே காரணம்” எனவும் கருத்து கூற சர்ச்சை கிளம்பியது.
இதற்கிடையில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் தூத்துக்குடி போராட்டம் தொடர்பாகவும் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்ட சமூக விரோதிகள் யார் என்பது குறித்து விளக்கம் அளிப்பதற்காக பிப்ரவரி 25ஆம் தேதி ஆஜராக நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது .
இந்நிலையில் தூத்துக்குடியில் விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராவதில் சிக்கல்கள் இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்க விசாரணையில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரி நடிகர் ரஜினிகாந்த் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ட்விட்டரில் #தொடைநடுங்கி_ரஜினி என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகியுள்ளது. இதில் ரஜினி விசாரணைக்கு ஆஜராக பயப்படுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.