கோவை:-
கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த இளம் மருத்துவர் உடலை அடக்கம் செய்யச் சொந்த கிராமதினரே எதிர்ப்பு தெரிவித்த சம்பவம், மனிதத்தை அனைவரும் மறந்து விட்டோமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
கோவை மாவட்டம் சிறுமுகையைச் சேர்ந்த வாசுதேவன். இவரின் மகன் ஜெயமோகன் (29).
ப்ளஸ் டூ தேர்வில், மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தவர். மருத்துவராக வேண்டுமென்பது அவரின் சிறு வயது கனவு.
மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் M.B.B.S முடித்துவிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ள தெங்குமரஹாடா என்ற மலைக் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியில் சேர்ந்தார். பரிசல் மூலமே அங்கு செல்ல முடியும். ஒருநாளும் தவறாமல் பணிக்குச் செல்வார்.
கடுமையான காய்ச்சல் காரணமாக, கோவையில் உள்ள PSG மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டது. ஆனால் ஜெயமோகனுக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தது. ஆனால் அவருக்கு டெங்குகாய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
டெங்குகாய்ச்சலால் இறந்த மருத்துவர் ஜெயமோகனின் உடலை அடக்கம் செய்ய அவரது சொந்த ஊரான சிறுமுகை கிராமத்திற்கு அவரது உறவினர்கள் கொண்டு சென்ற போது ஜெயமோகனின் உடலை ஊருக்குள் கொண்டு வரக் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
இதனை அறிந்து மனமுடைந்த அவரின் தாய், தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் .
கொரோனாவால் இல்லை டெங்குகாய்ச்சலால் தான் ஜெயமோகன் இறந்தார் என, உறுதி செய்த பின்னரே ஜெயமோகனின் உடலைக் கிராம மக்கள் ஊருக்குள் அனுமதித்தனர். அதன்பின்பு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
மக்களுக்கு தொண்டாற்றிய ஒரு இளம் மருத்துவரின் உடலை ஊருக்குள் அனுமதிக்க மறுத்த இந்த சமூகமா அவர்களின் சேவையை பாராட்டி கை தட்டினார்களா?