ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச்சில் தனது காப்புரிமை அனுமதித்து பயன்படுத்தப் பட்டுள்ளதாக அமெரிக்க டாக்டர் வழக்கு தொடர்ந்துள்ளார். சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஆப்பிள் 3 வாட்ச்சில் ஒழுங்கற்ற இதயத்துடிப்பை கண்டுபிடிக்கும் கருவியை அந்நிறுவனம் பொருத்தி இருந்தது. இந்த கருவி முறையற்ற இதயத்துடிப்பு பயனாளிகளுக்கு இருந்தால் உடனடியாக அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து மருத்துவரை அணுகுமாறு தகவல் தெரிவிக்கும்.
ஆனால் இத்தகைய தொழில்நுட்பத்தில் தனது காப்புரிமை மீறப்பட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த இருதய நோய் மருத்துவர் ஜோசப் வீசல் வழக்கு தொடர்ந்துள்ளார். இவருக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு மாறு பட்ட இதய துடிப்பை கண்டறிவதற்கான முறை மற்றும் கண்டறியும் கருவிக்கான காப்புரிமை வழங்கப்பட்டது. ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச்சில் இத்தகைய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்று தகவல் வெளியானவுடன் நிறுவனத்தை தொடர்பு கொண்டு தனது காப்புரிமை குறித்து எடுத்துக் கூறியுள்ளார். மேலும் தனது காப்பு உரிமை மீறப்பட்டதை எடுத்துச் சொல்லியும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த ஆப்பிள் நிறுவனம் முயற்சிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.