பிரதமர் மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் என்ஆர்சி இணைந்த குடியுரிமை திருத்த சட்டத்தால், இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் நிலை பாதிக்கப்படலாம், என அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வு சேவை சிஆர்எஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் தன்னாட்சி ஆய்வு அமைப்பான சிஆர்எஸ், இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக ஆய்வு நடத்தி கடந்த 18ம் தேதி அறிக்கையை சமர்பித்துள்ளது.
கடந்த 1955ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய குடியுரிமைச் சட்டம், சட்ட விரோதமாக குடியேறியவர்கள் குடிமக்களாக மாறுவதை தடை செய்கிறது. அதன் பின் இச்சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டாலும், எந்த ஒரு மத அம்சமும் சேர்க்கப்படவில்லை. ஆனால், சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் முறையாக, நாட்டின் நடுநிலை செயல்பாட்டில் மத அடிப்படையிலான அளவுகோல் சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் திட்டமிடப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, அதனுடன் இணைந்த குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றால் இந்தியாவில் உள்ள 20 கோடி முஸ்லிம் சிறுபான்மையினரின் நிலை பாதிக்கப்படலாம் என அமெரிக்க நாடாளுமன்றம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.