வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதியானது.
அமெரிக்காவில் நவம்பர்-3ல் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது.தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் டிரம்ப் மற்றும் பிடன் ஒரே மேடையில் விவாதத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில், டிரம்பின் நெருங்கிய ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவர் அளித்திருந்த பேட்டியில், “தற்போதுதான் நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளேன். முடிவுகள் எப்படி வருகிறது என நாம் பார்ப்போம்” எனக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அவருக்கும் அவரது மனைவி மெலனியாவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் உறுதிப்படுத்தினார். மேலும், இருவரும் தனிமைப்படுத்தல் செயல்முறைகளை உடனடியாக தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.