டெஹ்ரான்:-
முதன்முறையாக நிலத்தடியில் இருந்து தொலை தூர ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக ஈரான் பரிசோதித்து உள்ளது.
வருடாந்திர இராணுவ பயிற்சியின் ஒரு பகுதியாக ஈரான் ராணுவத்தைச் சேர்ந்த உயரடுக்கு புரட்சி இஸ்லாமிய ராணுவ படை பிரிவு இந்த நிலத்தடி ஏவுகணை பரிசோதனையை நிகழ்த்தியுள்ளது. மேலும் அரபு உலகில் முதன்முறையாக ஈரான் ராணுவத்தினரால் தான் இதுபோன்று நிலத்திற்கு கீழே இருந்து தொலை தூர ஏவுகணை சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என்று விண்வெளி ஆராய்ச்சிப் பிரிவு தலைவர் பிரிகேடியர் ஜெனரல் அமிரலி ஹாஜிஸாதே (Amirali Hajizadeh) கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே உரசல்கள் முற்றி உள்ள நிலையில் இந்த ஏவுகணை சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த ஏவுகணை சோதனை பூமிக்கு அடியில் இருந்து முற்றிலும் உருமறைப்பு (Camouflaged Way) முறையில் நிகழ்த்தப்பட்டுள்ளது.
நிலத்தடி ஏவுகணை சோதனை என்பது ஏவுகணைகள் பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் திடீரென்று பூமி கிழித்துக்கொண்டு வெளியே வரும் ஏவுகணைகள் குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை. இந்த ஏவுகணை பரிசோதனை ஈரான் அருகே உள்ள பனி ஃபரூர் (Bani Farur) தீவில் நடைபெற்றது.
அமெரிக்காவின் பிரம்மாண்டமான விமானம் தாங்கி கப்பல் யூ எஸ் எஸ் ஆபிரஹாம் லிங்கன் ஈரான் அருகே ஹோர்மஸ் ஜலசந்தியில் (Hormuz Strait) நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஹோர்மஸ் ஜலசந்தி வழியாகத்தான் உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் வர்த்தகம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை அச்சுறுத்தும் விதமாக ஈரான் தனது ஹெலிகாப்டர்களில் இருந்து ஏவுகணைகளை இந்த கப்பலுக்கு வெகு அருகில் செலுத்தி சோதனை செய்ததற்கு மறு தினமே இந்த நிலத்தடி ஏவுகணை பரிசோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் நிகழ்த்தியுள்ள இந்த ஏவுகணை பரிசோதனை மூலமாக வளைகுடா பிராந்தியத்தில் மேலும் பதற்றதம் அதிகரித்துள்ளது.