எண்ணற்ற அதிசயங்களை தாங்கி நிற்கும் வான்வெளியில் அரிய காட்சியாக, இந்த நூற்றாண்டின் நீண்ட நேர சந்திர கிரகணம், வரும் 19ம் தேதி நடக்கிறது.
சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்போது, சந்திரனின் மீது பூமியின் நிழல் படிந்து, அதை மறைக்கும்.
இந்நிலையில், இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சந்திர கிரகணம் வரும் 19ம் தேதி நடக்கிறது. 18ம் தேதி இரவு தொடங்கி 19ம் தேதி வரையில் இது ஏற்பட உள்ளது. இந்திய நேரப்படி பகல் 1.30க்கு இந்த கிரகணத்தின் உச்சம் ஏற்பட உள்ளது. அப்போது, சந்திரனின் 97 சதவீத பகுதியை பூமி மறைக்கும். இதனால், சந்திரன் சிகப்பு நிறத்தில் காணப்படும்.
இந்த கிரகணம் 3 மணி நேரம், 28 நிமிடங்கள் நீடிக்கும் என்று நாசா கணித்துள்ளது. ‘2001ம் ஆண்டு முதல் 2100ம் ஆண்டு வரையிலான நூற்றாண்டில், இதை விட வேறு எந்த சந்திர கிரகணமும் இவ்வளவு நீண்ட நேரத்துக்கு இருக்காது.
மேலும், உலகின் பெரும்பாலான பகுதிகளில், நேர மண்டலத்துக்கு ஏற்றபடி பல்வேறு நேரங்களில் இந்த கிரகணத்தை காண முடியும்.
குறிப்பாக, இந்த கிரகணத்தை வட அமெரிக்க நாடுகளில் இதை தெளிவாக காணலாம். அதோடு, தென் அமெரிக்க நாடுகள், கிழக்கு ஆசிய நாடுகள், பசிபிக் பிராந்தியம், ஆஸ்திரேலிய நாடுகளிலும் காணலாம்,’ என நாசா தெரிவித்துள்ளது.