டிரான்சில்வேனியா:-
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்துகளோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் அனைவரும் கொரோனா வைரஸ் ரோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஒரே வழி சமூக விலகல் மற்றும் முக கவசம் அணிவதுதான் என மருத்துவ உலகம் வலியுறுத்தி வருகிறது. எனவே இனி அனைவரும் மொபைல் பர்ஸ் உள்ளிட்டவற்றை வெளியே செல்லும்போது எடுத்து செல்வது போல உங்க கவசங்களை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.
இந்நிலையில், சமூக விலகலை மக்கள் கடைப்பிடிக்கும் வகையில், நீளமான ஷூக்களை தயாரித்து ருமேனியாவைச் சேர்ந்த காலணி தயாரிப்பாளர் கிரிகோர் லுப் (55) (Grigore Lup) என்பவர் அறிமுகம் செய்துள்ளார்.
ருமேனியா நாட்டின் டிரான்சில்வேனியாவின் (Transylvania) க்ளூஜ் (Cluj) நகரைச் சேர்ந்த கிரிகோர் லூப், 39 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருகிறார்.
கடந்த 2001 ஆண்டு, தனது கடையை தொடங்கினார் லுப்.
இவர் தனது 16 வயதிலிருந்து பாரம்பரிய ஹங்கேரியன் காலணிகளை தயாரித்து வருகிறார். இவருக்கு காலணிகளை தயாரிக்க சொல்லிக்கொடுத்த நபருக்கு தற்போது 93 வயதாகிறது. அவரும் இன்றுவரை பாரம்பரிய காலணிகளை தயாரித்து வருகிறார்.
இந்த ஷூக்களை அணிந்த இரண்டு நபர்கள், நேருக்குநேர் சந்திக்க நேர்ந்தால் இருவருக்கும் இடையே கிட்டத்தட்ட ஒன்றரை மீட்டர் இடைவெளி இருக்கும். ஷூ-வின் ஐரோப்பிய அளவில் 75 ஆகும். இந்த புதிய வடிவமைப்பை பார்த்து சில கடைக்காரர்கள் ஆர்டர் கொடுத்துள்ளனர்.
ஒரு ஜோடி ஷூவை தயாரிக்க இரண்டு நாட்கள் ஆவதாகவும், இதற்கு ஒரு சதுர மீட்டர் தோல் தேவைப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு ஜோடி ஷூவின் விலை 115 அமெரிக்க டாலர் (500 Lei) (இந்திய ரூபாய் மதிப்பில் 8650) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.