பெய்ஜிங்
சீனாவில் இந்த ஆண்டு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மின்சார தேவை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப மின்உற்பத்தி இல்லாததால் பல பகுதிகளில் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தொழிற்சாலைகள் மட்டுமல்லாது வீடுகளுக்கான மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது, எனவே ஏராளமான குடியிருப்பு பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.
கடுமையான மின் தட்டுப்பாடு காரணமாக தொழிற்சாலைகள் அனைத்தும் ஒருவார காலத்திற்கு உற்பத்தியை நிறுத்திவைக்குமாறு சீனா அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மின் தட்டுப்பாடு காரணமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற பொருட்களின் உற்பத்தி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்கள் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில் சீனாவில் உற்பத்தி பாதிப்பு சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சீனாவின் வடகிழக்கு நகரமான லியோயாங்கில், மின்சாரம் தடைபட்டதை அடுத்து, உலோக வார்ப்பு தொழிற்சாலையில் காற்றோட்டம் நிறுத்தப்பட்டதால், 23 பேர் விசவாய்வு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.