நியூயார்க்:-
“கொரோனா வைரசுக்கு எதிராகப் போராட அதிக நிதி தேவைப்படுகிறது. அதனால், எங்களைப் போன்ற பெரும் கோடீஸ்வரர்களுக்கு அதிக வரி விதித்து நிதி திரட்டுங்கள்” என்று 83 உலக கோடீஸ்வரர்கள் பல்வேறு நாட்டு அரசுகளுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
அமெரிக்கா, இங்கிலாந்து, டென்மார்க், ஜெர்மனி, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் ஒன்று சேர்ந்து, ‘லட்சாதிபதிகளின் மனித நேயம்’ என்று திறந்த மடல் ஒன்றை அனைத்து நாடுகளுக்கும் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில்:-
உடனே எங்களுக்கு அதிக வரி விதித்து சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துங்கள். “நாங்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மக்களை ஆம்புலன்ஸை ஓட்டி மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதில்லை, நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் மக்களுடனிருந்து உதவி செய்யவில்லை, நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு வீடாகச் சென்று உணவுப் பொருள்களையும் வழங்குவதில்லை. ஆனால், எங்களிடம் ஏராளமான அளவுக்குப் பணம் இருக்கிறது.
கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை மீட்பதற்கு ஏராளமான பணம் தேவைப்படுகிறது. வியாபாரம் இல்லாததால் கோடிக்கணக்கான மக்களின் வேலை பறிபோய் உள்ளது. உலகம் முழுவதும் நூறு கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். கொரோனா நோய்த் தொற்று உலகம் முழுவதும் ஐம்பது கோடிக்கும் அதிகமான மக்களை வறுமையில் தள்ளி உள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள், பாதுகாப்பு உபகரணங்கள், முகக்கவசங்கள், வென்டிலேட்டர்கள் ஆகியவற்றுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. பொது சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். சுகாதார கட்டமைப்பில் அதிக முதலீடும் தேவைப்படுகிறது.
இரவு பகல் பாராது மக்களுக்காக சேவை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு கடன்பட்டுள்ளோம். ஆனால், அவர்களுக்கு மிகக்குறைந்த அளவில் தான் ஊதியம் வழங்கப்படுகிறது.
வலிமையுள்ளவர்கள் தான் சுமையைத் தாங்கவேண்டும். அதனால், எங்களுக்கு அதிக வரி விதிப்பை மேற்கொள்ளுங்கள், இது மட்டுமே தீர்வு. பணத்தை விடவும் மனித நேயம் தான் முக்கியம்” என்று உள்ளது.
இந்தக் கடிதத்தில் அபிகெய்ல் டிஸ்னி மற்றும் டிம் டிஸ்னி, ஜெர்ரி கிரீன்பீல்டு, மேரி போர்டு, பிரிட்டன் திரைப்பட இயக்குனர் ரிச்சர்ட் கார்டிஸ், நியூசிலாந்து நாட்டின் இரண்டாவது பெரும் கோடீஸ்வரரும் வேர்ஹவுஸ் குழுமத்தின் நிறுவனருமான சர் ஸ்டீஃபன் டிண்டால், அயர்லாந்து கோடீஸ்வரர் ஜான் ஓ’ ஃபாரெல் உள்ளிட்ட உலகக் கோடீஸ்வரர்கள் பலரும் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், இதில் ஒரு இந்தியர் கூட கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கடிதத்தை இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாகப் பரிசீலனை செய்து வருகின்றன. உலகக் கோடீஸ்வரர்கள் எழுதியிருக்கும் இந்தக் கடிதம் அனைவரையும் நெகிழச் செய்வதாக உள்ளது!
கடந்த ஜனவரி மாதத்திலேயே உலக பணக்காரர்களின் முதல் வரிசையில் இருக்கும் மைக்ரோசாஃப்ட் அதிபர் பில்கேட்ஸ் உலக கோடீஸ்வரர்கள் தற்பொழுது செலுத்துவதை விட அதிகம் வரி செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவும் இந்த காலகட்டத்தில் உலக அளவில் பாதி பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைப் பிடியில் தள்ளப்பட்டுள்ளனர் என்று ஐநா சபை எச்சரித்துள்ள வேளையில் உலக பணக்காரர்களின் சொத்து மதிப்பு 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.