ஹைதராபாத்:-
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. 2005-ஆண்டு பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நாகார்ஜுனா நடிப்பில் வெளியான ‘சூப்பர்’ திரைபடம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் மாதவன் ஜோடியாக ‘ரெண்டு’ படத்தின் மூலம் என்ட்ரி ஆனார்.
அருந்ததி படம் அனுஷ்காவுக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. தொடர்ந்து பட வாய்ப்புகளும் குவிந்தன. சிரஞ்சீவி, நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, ரஜினி, அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, மகேஷ்பாபு, பிரபாஸ், ரவி தேஜா எடிட்டர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
ராஜமௌலி இயக்கத்தில் நடித்த பாகுபலி திரைபடம் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து இஞ்சி இடுப்பழகி படத்தில் கதாபாத்திரத்துக்காக உடல் எடையை கூட்டிய அவரால் பின்னர் அதை குறைக்க முடியவில்லை. இதனால் முன்னணி கதாநாயகர்கள் வேறு இளம் நடிகைகளை தங்களுக்கு ஜோடியாக்கினர். மேலும் நடிகர் பிரபாஸுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.
அனுஷ்காவுக்கு படங்கள் குறைந்தது. தற்போது மாதவனுடன் ‘சைலன்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஊரடங்கால் திரைக்கு வராமல் முடங்கி உள்ளது. தியேட்டருக்கு பதிலாக இணைய தளத்தில் ரிலீஸ் செய்யலாமா என்று யோசித்து வருகின்றனர்.
கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் அவரை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் அந்த படம் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக கைவிடப்படலாம் என்று தகவல் பரவி வருகிறது.
அனுஷ்காவுக்கு தற்போது 38 வயது ஆகிறது. இந்த நிலையில் சினிமாவை விட்டு விலக அவர் முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகிறது.