அமெரிக்கா:-
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. கொரோனோ வைரஸ் காரணமாக உலக நாடுகளில் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த வைரஸ் தாக்கத்தால் சீனாவில் மட்டும் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல இத்தாலியிலும் இதனுடைய பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது.
இந்தியாவில் கொரோனோ வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை எழுபதுக்கு மேல் உயர்ந்திருக்கிறது.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டுமென்றும் தேவையில்லாமல் வெளிநாடுகளுக்கு பயணிக்க கூடாது என்றும் மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
கொரோனோ வைரஸ் காரணமாக உலக அளவில் விமான சேவையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. உலக அளவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த வைரஸூக்கு இதுவரை உரிய தடுப்பூசிகள், மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அமெரிக்காவைச் சேர்ந்த கார் டிரைவர் ஒருவர் வித்தியாசமான வழியை கண்டுபிடித்து இருக்கிறார்.
அவருடைய காரில் பிளாஸ்டிக் கவர் உதவியோடு ஒரு சிறிய கம்பார்ட்மென்ட் அமைக்கப்பட்டிருக்கிறது. டிரைவர் சீட்டை தவிர்த்து மற்ற இருக்கைகள் முழுவதுமாக இந்த பிளாஸ்டிக் ஷீட்டால் மூடப்பட்டிருக்கிறது.
ஒருவேளை கொரோனோ வைரஸ் பாதித்த நபர் இவருடைய காரில் பயணித்தால் இவருக்கு தொற்று ஏற்படாதவாறு இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
Phildoeshair என்ற சுற்றுலா பயணி இந்த புகைப்படத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவத் தொடங்கியிருக்கிறது.
இந்தியாவில் ஓலா மற்றும் உபேர் சேவைகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் இந்த வித்தியாசமான முறையை அனைத்து ஓட்டுனர்களும் பின்பற்றினால் உபயோகமாக இருக்கும் என்று இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.