சேலம்:-
சேலத்தில் தனது மூன்றாவது மனைவியின் நடத்தை மீது சந்தேகத்தால் அவருடைய தலையை வெட்டிய கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் உள்ள வெள்ளாளகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் (84). இவர் கொத்தனார்-ஆக வேலை பார்த்து வருகிறார் .
30 வருடங்களுக்கு முன்பு முதல் திருமணம் செய்த நாராயணனுக்கு முதல் மனைவியுடன் பிரச்சினை ஏற்பட்டதால் அவர் பிரிந்து சென்றுவிட்டார். பிறகு இரண்டாவதாக வேறொரு பெண்ணை நாராயணன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இரண்டாவது மனைவியும் தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அடுத்து மூன்றாவதாக லக்ஷ்மி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். அனைவருக்குமே திருமணமாகி விட்டதால் நாராயணனும் லக்ஷ்மியும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நாராயணன் வேலைக்கு செல்லவில்லை .இதனால் அவரை வேலைக்கு செல்லுமாறு மனைவி லக்ஷ்மி வற்புறுத்தியதாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் குடிப்பதற்காக பணம் கேட்டு நாராயணன் லக்ஷ்மியை வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது .
அப்போது அவருடைய மனைவியின் நடத்தை குறித்து நாராயணன் பிரச்சனை செய்ததாக தெரிகிறது. இருவரும் பேசிக்கண்டிருக்கும்போதே லக்ஷ்மியின் கழுத்தை வெட்டி இருக்கிறார் நாராயணன்.
லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் நாராயணன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது துண்டிக்கப்பட்ட லட்சுமியின் தலையுடன் நாராயணன் வீட்டிற்குள் உட்கார்ந்திருந்தார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் நாராயணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.