உலகம் முழுவதிலும் கொரோனோ வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உலகின் பல நாடுகள் தங்கள் எல்லையை மூடி வருகின்றன. இந்தியாவிலும் கொரோனோ வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
உலக நாடுகளில் பல பிரபலங்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக ஜெர்மனி நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி அதிபரான ஏஞ்சலா மெர்கல் அண்மையில் காய்ச்சலுக்கான தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்த தடுப்பூசியை போட்ட மருத்துவர் தற்பொழுது கொரோனோ நோயால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் தனக்கு ஊசி போட்டதால் தனக்கும் ஒரு பாதிப்பு இருக்கலாம் என்று ஜெர்மனி அதிபர் கருதியதாகத் தெரிகிறது. இந்த நிலையில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கெல் தெரிவித்திருக்கிறார். இருப்பினும் முக்கிய பணிகள் அனைத்தையும் வீட்டிலிருந்தே அதிபர் மேற்கொள்வார் என்று ஜெர்மனி நாட்டின் அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
ஜெர்மனியை பொறுத்தவரை இதுவரை 24,873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 90-க்கும் அதிகமானோர் கொரோனோ வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.