குடியுரிமை திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுடன் சட்டமானது. இதனை எதிர்த்து ஜாமியா பல்கலைகழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அவர்களுக்கு ஆதரவாக டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களும் டெல்லி பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால் டில்லியில் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பதற்றம் காரணமாக டில்லியில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் இந்த சட்டத்தை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள் அறிவித்தன.
லக்னோ, கோவை, சென்னை, மதுரை, புதுச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு மாநில மாணவர்களும், கல்லூரி மற்றும் பல்கலை மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தெலுங்கானா பல்கலை., மாணவர்கள் தேர்வுகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். லக்னோ, கோவையில் போராட்டத்தை தடுக்க முயன்ற போலீசார் மீது மாணவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கல்லூரி வளாகங்கள் போர்களம் போல் காட்சி அளிக்கின்றன.
இதையடுத்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும், வல்லுனர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் குடியுரிமை சட்டம் எந்த ஒரு குடிமகனையும் பாதிக்காது. இது குறித்து இந்தியர்கள் யாரும் வருத்தப்பட தேவையில்லை என்றும். இது ஒற்றுமையும் அமைதியை கடைபிடிக்க வேண்டிய நேரம் என்றும் பிரதமர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.